மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டி, மரங்களோடும், இயற்கையோடும் சகோதரத்துவத்துடன் இருப்போம் என உறுதிமொழி எடுத்த திருப்புத்தூர் எஸ் கே எஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள்!
விதைப்பந்து வீசியும், பறவைகளுக்கு தானியங்கள், தண்ணீர் வைத்தும் இயற்கையோடு மனிதன் கொண்டுள்ள பிணைப்பை வெளிப்படுத்திய மாணவர்கள்!
திருப்புத்தூர் ஆக :29
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே தேரேந்தல்பட்டியில் அமைந்துள்ள எஸ்கேஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள், ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு, பள்ளி வளாகம் மற்றும் பறவைகள் சரணாலயத்தில் உள்ள மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டி உறவுகளாக்கிக் கொண்டுள்ள வினோத நிகழ்வு நடந்தது.
பொதுவாக ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் கைகளில் மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட வண்ண வண்ண நூல்கள் கட்டி தங்களது உறவுகளை புதுப்பித்துக் கொள்வர். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை வாழ்நாள் முழுதும் பாதுகாப்பேன் என உறுதிக்கூறும் நிகழ்வே ரக்ஷா பந்தன் பண்டிகையாகும். அந்த பண்டிகையை எஸ் கே எஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வித்தியாசமாகவும், சுற்றுச்சூழலை நேசிக்கும் வண்ணமும் மாற்றி யோசித்து கொண்டாடினர். இப்பள்ளி மாணவர்கள் இவ்விழாவை முன்னிட்டு, அருகில் உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்திற்கு சென்று அங்குள்ள மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டி ஒரு புதுவித பந்தத்தை உருவாக்கினர். மனிதர்களைப் போலவே மரங்களையும் சகோதரர்களாக கருதி மாணவர்கள் செய்த இந்நிகழ்வு இப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மரங்களைச் சகோதரர்களாகக் கருதி, இயற்கையோடு மனிதன் கொண்டுள்ள பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில், அவற்றை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் எனவும், மரங்களோடும், எழில் மிகு இயற்கையோடும், எப்போதும் சகோதரத்துவத்துடன் இருப்போம், வாழ்நாள் முழுதும் மரங்களை பாதுகாப்போம் என்ற வகையில் மாணவர்கள் குழுவாக இணைந்து மரங்களுக்கு ராக்கி கயிறு கட்டி, உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து நூற்றுக்கணக்கான விதைப்பந்துகளை பறவைகள் சரணாலயத்தில் எரிந்து அதிக மரங்கள் வளரவும் வழிவகை செய்தனர். பின்பு அங்கிருந்து பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தொடர்ந்து, கோடை காலத்தில் பள்ளிக்கு வருகை தரும் சின்னஞ்சிறு பறவைகளின் பசியை போக்க தானியங்களையும், தாகத்தை தீர்க்க தண்ணீரையும் சுற்றுச் சுவரில் வைத்து மரங்களோடு பறவைகளையும் பாதுகாக்க உறுதிமொழி எடுத்தனர். பள்ளியின் தாளாளர் ஞானபண்டிதன் ஆலோசனையின் பெயரில், பள்ளி முதல்வர் ஆதிகேசவன் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் மீனு, ஹரிதா, பாரதி, அஜிதா, திவ்யா, கிருத்திகா, கலையரசி, வான்மதி ராதா, சாதனா, பாண்டிமலர், அழகுமீனாள், தேன்மொழி, திவ்யபாரதி, வித்யா, பிரபா ஜெயம், பவித்ரா, ஆப்ரகாம் பவுல் வினோதா மற்றும் பிருந்தா ஆகியோர் மாணவர்களை அழைத்து சென்றனர். ரக்ஷா பந்தன் பண்டிகையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இயற்கையோடு மனிதன் கொண்டுள்ள உறவை வெளிப்படுத்தவும், மரங்களுக்கு புனித ராக்கி கயிறு கட்டி கொண்டாடிய மாணவர்களின் புதுவித முயற்சி இப்பகுதியில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.