திருப்பத்தூர் அருகே சேவினிபட்டியில் மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு!
13 காளைகள் – 117 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
திருப்புத்தூர் ஆக :30
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகேயுள்ள சேவினிபட்டி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் முதலாம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜோசப் தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்ற போட்டிக்கு திருப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி தலைமை ஏற்று, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை துவங்கி வைத்தார்.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 13 காளைகள் போட்டியில் பங்கேற்றன. காளைகளை அடக்குவதற்காக 117 மாடுபிடி வீரர்கள், ஒரு அணிக்கு 9 பேர் வீதம் களமிறங்கினர்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மஞ்சுவிரட்டு திடலின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளையை அடக்குவதற்கு 9 பேர் கொண்ட குழுவினருக்கு 20 நிமிடங்கள் கால அவகாசம் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் காளையை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் அடங்காமல் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி சார்பில் ரொக்கப் பரிசுகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கினார்.
மஞ்சுவிரட்டு இப்போட்டியை காண திருப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், மஞ்சுவிரட்டு ரசிகர்களும் திரண்டு வந்து போட்டியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
விழா ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபிநாத் ராஜா, இணைச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சேவினிபட்டி முருகேஷ், வடக்கு மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர்கள் கணேசன், சமீர் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.