திருப்புத்தூர் அருகே கம்பர் கவி பாடிய பிரசித்தி பெற்ற அய்யனார் கோயிலில் கும்பாபிஷேக விழா!
நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு!
திருப்புத்தூர் ஆக :24
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே கூத்தக்குடி கிராமத்தில் அருள்பாலிக்கும் கம்பர் கவி பாடிய, பிரசித்தி பெற்ற புனித தலமான அருள்மிகு ஸ்ரீ பூரண புஷ்கலாம்பாள் சமேத ஸ்ரீ கலிதீர்த்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கிராமத்து கோயிலில் புதிதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 23 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி முதல்கால யாக பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜையும், நேற்று நான்காம் கால யாக பூஜையுடன் பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்பு யாகசாலையில் இருந்து கலசம் புறப்பாடாகி கோயிலை சுற்றி வலம் வந்தது. அங்கு சிங்கம்புணரி சேவகபெருமாள் அய்யனார் கோயில் ஸ்தானிகர் சிவாச்சாரியார் சேவற்கொடியோன் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கலச நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டு, மூலவர் ஸ்ரீ கலிதீர்த்த அய்யனாருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கம்பத்தடி கருப்பர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர், ஸ்ரீ முனீஸ்வரர், நொண்டி கருப்பர், பேச்சி ராக்காச்சி, சப்த கன்னிகள், பட்டவர், பலிபீடம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கலச நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் நடுவிக்கோட்டை, மேலையூர், கீழையூர், கண்டரமாணிக்கம், வலையபட்டி, மேலமகாணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். முன்னாள் திருப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கே.உமாதேவன் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவினை கூத்தகுடி கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.