திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆடிப்பூர விழா கொடியேற்றம்
திருப்புத்தூர் ஆக :06
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆடி பிரம்மோற்சவம், ஆண்டாள் திருவாடிப்பூரம் உற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தையொட்டி 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று தொடங்கப்பட்டது. விழாவையொட்டி கொடி மரத்தில் கருட வாகனம் பொருந்திய கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக விழாவையொட்டி காலை பெருமாள், ஆண்டாள் கருங்கல் மண்டபம் எழுந்தருளல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடிக்கு தீப, தூப ஆராதனை நடைபெற்றது. பின்பு மேளதாளங்கள், நாதஸ்வரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. கொடி ஏற்றத்திற்கு முன்பாக அதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம், மஞ்சள், அரக்கு, தயிர் உள்ளிட்ட திரவியங்களால் விசேஷ அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் வருகின்ற 14 ஆம் தேதி மாலை 4.40 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்று தேர் அலங்காரத்தில் பெருமாளும், ஆண்டாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.