திருப்புத்தூரில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 269-வது குருபூஜை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் 55 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
ரொக்கம், கோப்பைகளுடன், பறவையும் பரிசாக வழங்கப்பட்டது!
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகு முத்துக்கோனின் 269-வது குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று வீர யாதவ சமுதாய அறக்கட்டளையின் சார்பாக, அதன் நிறுவனரும் அவைத்தலைவருமான எம்.மாணிக்கம் தலைமையில், மாபெரும் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. மதுரை - திருப்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டுபிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு பிரிவில் 19 ஜோடிகள், சிறிய மாடு பிரிவில் 35 ஜோடிகள் என மொத்தம் 54 ஜோடிகள் பங்கேற்றன. இதில் சிறிய மாடு பிரிவில் அதிக அளவில் மாடுகள் பங்கேற்றதால் முதல் சுற்றில் 18 மாடுகள், இரண்டாவது சுற்றில் 17 மாடுகள் என இரு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது. இதில் பெரிய மாடு பிரிவிற்கு 8 மைல் தூரமும், சிறிய மாடு பிரிவிற்கு 6 மைல் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தேனி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் தங்கள் காளைகளுடன் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற 14 மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா குழுவினர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். வெற்றி பெற்ற ஒவ்வொரு மாட்டின் உரிமையாளர்களுக்கும் ரொக்கத்துடன், இரண்டு கோப்பைகளும், தீவனச் சட்டியும் பரிசாக வழங்கியதுடன் சேவல் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி போட்டியினை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்தோடு கண்டு களித்தனர்.