செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 17-வது ஆண்டு விளையாட்டுப் போட்டி
விளையாட்டுப் போட்டி
காரைக்குடி ஆக : 30
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் 17-வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.
விழாவில் அர்ஜுனா விருது பெற்றவரும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூத்த விளையாட்டு அலுவலருமான மனத்தி பி.கணேசன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்,சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சி.ரமேஷ் கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பள்ளி சேர்மன் எஸ்.பி. குமரேசன் தலைமையிலும், துணைச் சேர்மன் கே.அருண்குமார் முன்னிலையிலும் நடைபெற்ற மாணவர்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, மாணவர்கள் விளையாட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் வானில் சமாதானப் புறாக்கள் பறக்கவிடப்பட்டு, 17-வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து பள்ளி முதல்வர் ராமசுப்ரமணியன் வரவேற்புரையாற்றினார். இதையடுத்து சிறப்பு விருந்தினர்களுக்கான கௌரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பள்ளியின் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் டேக்வாண்டோ மற்றும் சிலம்பம் உள்ளிட்ட சிறப்பு செயல்விளக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் ட்ரில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன. மாணவர்கள் தங்களது விளையாட்டுத் திறமை, குழு உணர்வு, ஒழுக்கம் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர். தொடர்ந்து பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் நடைபெற்றன.
200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை ஆகாஷ் ஹவுஸ் வென்றது. அக்னி ஹவுஸ் இரண்டாம் இடத்தையும், திரிசூல் ஹவுஸ் மூன்றாம் இடத்தையும், ப்ருத்வி ஹவுஸ் நான்காம் இடத்தையும் பெற்றன.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களையும், போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் சிறப்பு விருந்தினர்கள், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
பள்ளி துணை முதல்வர் பிரேம சித்ரா நன்றி கூறினார்.