திரு வைரவன்பட்டியில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி பெருவிழா
ஏராளமான பக்தர்கள் வழிபாடு
திருப்புத்தூர் ஜூலை :08
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே வைரவன்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள் சமேத ஸ்ரீ திருமெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோயிலில், தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீமூலபால கால பைரவர் சுவாமிக்கு ஆனி மாத தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது. பழமையான, பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நடைபெறும் தேய்பிறை அஷ்டமி யாக விழா சிறப்பு வாய்ந்ததாகும். பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும்.
அதனடிப்படையில் நடைபெற்ற ஆனி மாத தேய்பிறை அஷ்டமி விழாவில் மகா பைரவயாகம் தொடங்கப்பட்டது, அப்போது சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நெய், வஸ்திரம், மற்றும் புஷ்பயாகமும், மகாபூர்ணாகுதியும் பிரம்மாண்டமாக நடைபெற்று, பின்பு யாகத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் குடத்திற்கு அடுக்கு தீபம், பஞ்சமுக தீபம், கும்ப தீபம், நாக தீபம், ஒற்றை தீபம் மற்றும் கற்பூர தீபம் உட்பட பல்வேறு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
அனி மாதத்தில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி விழா என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாம்பல் பூசணியிலும், தேங்காய் மற்றும் அகல் விளக்கிலும் விளக்கேற்றி பைரவரை வழிபட்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் ரவிசந்திரன் மற்றும் மஹா ஸ்வாமிநீ பீடம் பாண்டிராஜன் ஆகியோர் செய்திருந்தனர். கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது இந்த திருப்பணிகளிலும் பக்தர்கள் பங்கேற்று தங்களால் முடிந்த நிதி உதவி அளித்து கலந்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் விழாக்கமிட்டி சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.